பவானி: பவானி அருகே போத்தநாயக்கனூரில் விவசாயி ரங்கசாமி வளர்த்து வந்த பசுமாடு, ஒரே பிரசவத்தில் இரு கன்றுகளை ஈன்றுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியை அருகேயுள்ள மயிலம்பாடியை அடுத்த போத்தநாயக்கனூரை சேர்ந்தவர் ரங்கசாமி (61). விவசாயி. இவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் நாட்டு மாடுகள், சிந்து, ஜெர்சி உள்ளிட்ட மாடுகள், செம்மறி, வெள்ளாடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.
திமுக பிரமுகரான இவர், கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இவர் வளர்த்து வந்த உயர்ரக பசுமாடு, நேற்று முன்தினம் அதிகாலை இரு கன்றுகளை ஈன்றது. தலா ஒரு காளை, கிடாரி கன்றுகளை ஈன்ற பசுமாடும், கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளது. இதனை அப்பகுதியினர் வியப்புடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.