மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை விழா கமிட்டியினர் இனிப்புகளை வழங்கி தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு கிராமம். ஆண்டுதோறும் தை மாதம் 2ம் நாள் இங்குள்ள மஞ்சமலை ஆற்றில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பாலமேட்டில் ஜனவரி மாதம் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிறப்புமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக வாடிவாசல் முன்பாக மக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் அழைப்பிதழ் வழங்கும் பணியை துவங்கினர்.
முன்னதாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஜல்லிக்கட்டு குறித்து மனு கொடுத்துள்ள விழா குழுவினர், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.