ஆலந்தூர்: பழவந்தாங்கல் ஜெய்ஹிந்த் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (38). உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். நேரு தெருவை சேர்ந்தவர் காந்திமதி (40). இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கார்களை பழவந்தாங்கல் குமரன் தெரு வேம்படி சக்தி விநாயகர் கோயில் அருகே தினசரி நிறுத்துவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 2 பேரும் கார்களை நிறுத்தி இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த 2 கார்களும் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பழவந்தாங்கல் போலீசார், கிண்டி மற்றும் அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் 2 கார்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.