லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே சிபிஐ. அளித்த புகாரின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி அங்குள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சிபிஐ. ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடத்தும் லண்டன் நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. தன்னை நாடு கடத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது லண்டனில் உள்ள ராயல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெரமி ஸ்டூவர்ட்-ஸ்மித், ராபர்ட் ஜே அமர்வு, நிரவ் மோடி கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர். இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருப்பதாக தெரிகிறது.