விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர பாஜ துணைத்தலைவர் பாண்டியன். இவரது மூத்த மகன் கார்த்திக்கிற்கு, தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2வது மகன் முருகதாஸூக்கு ரயில்வேயிலும், வேலை வாங்கித் தருவதாக கூறி, திருத்தங்கல்லைச் சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் கலையரசன் ஆகியோர், கடந்த 2017ல் ரூ.11 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பின், கடந்த 5 ஆண்டாக வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து, பாண்டியன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து தலா ரூ.2 லட்சத்திற்கு 5 காசோலைகள் மற்றும் ரூ.1 லட்சத்திற்கு ஒரு காசோலை பாண்டியனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் பாண்டியனிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளனர். பாக்கியிருந்த காசோலைகள் வங்கியில் செலுத்தி பணம் இல்லாமல் திரும்பியதாகவும், பாக்கி தரவேண்டிய ரூ.9 லட்சத்தை திருப்பி கேட்டும் தராத நிலையில், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது பாண்டியன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலையரசனை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.