புதுடெல்லி: விமான நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் உட்பட பயணிகளின் பல்வேறு பிரச்னைகள் கலைய 2,400 சிஐஎஸ்எப் இடங்கள் புதிதாக உருவாக்க ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நுழைவு வாயில்கள், உடமைகளை இறக்கி விடுதல், பாதுகாப்பு சோதனை பகுதிகள் உட்பட விமான நிலையங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பயணிகளின் தொடர்ச்சியாக புகார் அளித்தனர். குறிப்பாக, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறித்து ஏராளமான புகார்கள் வந்தது.
இதுகுறித்து விவாதிக்க ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சிஐஎஸ்எப் மற்றும் குடியேற்றப் பணியகம் போன்ற முக்கிய பங்குதாரர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சரக்குகள் வைத்திருக்கும் பகுதி தவிர, 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று முனையங்களில் விரிவாக்கம் நடைபெற்று வரும் நிலையில், 1,400 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொண்ட கூடுதல் படை விரைவில் நிறுத்தப்படும். பாதுகாப்பு மற்றும் பயணிகளை தேவையை பூர்த்தி செய்ய சிஐஎஸ்எப்க்கு 2,400 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.