×

புளியந்தோப்பில் உள்ள மக்கள் மருந்தகத்தில் வலி நிவாரண மாத்திரைகள் போதை மாத்திரையாக விற்பனை: வாலிபரிடம் போலீசார் விசாரணை

பெரம்பூர்: புளியந்தோப்பில் உள்ள மக்கள் மருந்தகத்தில், வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகள் எனக் கூறி விற்பனை செய்த வாலிபரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் இயங்கி வருகிறது. இதனை, பிரகாஷ் என்பவர் உரிமம் எடுத்து, புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயசூர்யா (25) என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். நாளொன்றுக்கு ₹1,500 வாடகை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயசூர்யா மருந்தகத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த மருந்தகத்தில் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகள் என்று கூறி சில இளைஞர்கள் தொடர்ந்து அதனை வாங்கி வருவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன், அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட அந்த மருந்தகத்தில் இளைஞர்கள் சிலர் மாத்திரைகளை வாங்கும்போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, அவர்களிடமிருந்து 100 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், எந்தவித மருத்துவரின் ஒப்புதல் சீட்டும் இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை ஏன் இவ்வாறு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு ஜெயசூர்யா முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. எனவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மருந்து ஆய்வாளரிடம், ஜெயசூர்யாவை ஒப்படைத்தனர். தொடர்ந்து, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருந்து ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஜெயசூர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : People's Pharmacy ,Pulyanthop , Selling pain reliever pills as narcotic pills at People's Pharmacy in Pulyanthop: Police interrogates teenager
× RELATED புளியந்தோப்பில் வீட்டுமுன்பு பைக்...