சென்னை: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சராக பொறுப்பேற்றபின் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்துள்ளதால் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக உதயநிதிக்கு புத்தாடைகள், பொன்னாடைகள் போர்த்தி, பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தனர்.