தேனி: மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019ல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்த உதித்சூர்யா என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு காலகட்டங்களில் இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மற்றும் அவர்களின் பெற்றோர், இடைத்தரகர்கள் என 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா முராரே (37) என்பவரை தேனி சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி பெங்களூருவில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சாகித் சின்ஹா (39) மற்றும் ரகுவன்ஸ் மணி (39) ஆகிய இருவரையும் தேனி சிபிசிஐடி போலீசார் நேற்று பெங்களூரில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாகித் சின்ஹா மற்றும் ரகுவன்ஸ் மணி இருவரும் பீகாரில் எஜுகேஷன் கன்சல்டிங் ஏஜென்சி நடத்தி வந்ததும், அதன் மூலமாக நீட் தேர்வில் மாணவ, மாணவிகளை ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தியதும், அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.