×

இரண்டரை ஆண்டுக்கு பிறகு சென்னை -யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை: வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும்

சென்னை: சென்னையில்  இருந்து இலங்கை யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு இரண்டரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் விமான சேவை, நேற்று தொடங்கியது. ஏற்கனவே, வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும். தற்போது, கொழும்பு விமானநிலையத்துக்கு மட்டுமே விமான சேவை இருந்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கு 2019ம் ஆண்டு முதல் வாரத்துக்கு மூன்று நாட்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஊரடங்குகளை அமல்படுத்தின.

இதையடுத்து யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு ஓய்ந்து சகஜநிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டு விமான சேவை மீண்டும் துவங்கியது. ஆனால் சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை துவங்க வேண்டுமென கோரிக்கை வைத்தன. அதன்படி இரண்டரை ஆண்டுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஏற்கனவே விமானங்களை இயக்கிய அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமான சேவையை துவங்கியுள்ளது.

 தற்போது வாரத்தில் 4 நாட்கள் விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் விமான சேவை நடக்கும். காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு விமானம், பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது. நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனம் 64 சீட்டுகள் கொண்ட ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானத்தை இயக்கியது. முதல் நாள் என்பதால் பயணிகளுக்கு விரிவான அறிவிப்பும் இல்லாததால், நேற்று 12 பயணிகள் மட்டுமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்தனர்.

Tags : Chennai- ,Jaffna , Chennai-Jaffna flight service after two and a half years: operated 4 days a week
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்