புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதையடுத்து அவர் கடந்த 2 வாரத்திற்கு முன் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது, தன்மீதான வழக்கு தொடர்பாக சில தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்க விரும்புவதாக கூறிய நிலையில், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே ஜாக்குலின் பெர்னாண்டசின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதால் அவர் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்ல முடியாது. இந்நிலையில் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜரானார். அவர் ஏற்கனவே அளித்த வாக்குமூலம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது.