×

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை: வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும்

சென்னை : கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட விமானம், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இன்று முதல் துவங்கியது. சென்னையிலிருந்து இலங்கை யாழ்ப்பாணம் விமானநிலையத்திற்கு இரண்டரை ஆண்டுக்கு  பிறகு மீண்டும் விமான சேவை, இன்று முதல் தொடங்குகிறது. ஏற்கனவே, வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த விமானங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும்.

இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு விமானநிலையத்திற்கு மட்டுமே விமான சேவை இருந்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாப்னா எனப்படும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் நிலையத்திற்கு விமான சேவை இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவை செய்யவேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.

இதையடுத்து ஒன்றிய அரசு இதற்கான நடவடிக்கை எடுத்து, கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை  தொடங்கியது. வாரத்தில் 3 நாட்கள் விமான சேவை இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய ரக ஏடிஆர் விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஊரடங்குகளை அமல்படுத்தின.

இதையடுத்து யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு ஓய்ந்து சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட  வெளிநாட்டு விமான சேவை  மீண்டும் துவங்கியது. ஆனால் சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை துவங்க வேண்டுமென கோரிக்கை வைத்தன.

அதன்படி இரண்டரை ஆண்டுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. ஏற்கனவே விமானங்களை இயக்கிய அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமான சேவையை துவங்கியுள்ளது. ஏற்கனவே வாரத்தில் 3  நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு இயக்கப்பட்ட விமான சேவை தற்போது வாரத்தில் 4  நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் விமான சேவை நடக்கும்.

காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு விமானம், பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை துவங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இதோடு இலங்கையில்  அதிகம் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் விமான சேவை பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் ஏர்  நிறுவனம் 64  சீட்டுகள் கொண்ட ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானத்தை இயக்கியது. முதல் நாள் என்பதால் பயணிகளுக்கு விரிவான அறிவிப்பும் இல்லாததால், இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பயணிகள் மட்டுமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்தனர். இன்று முதல் நாளில் விமானம் காலதாமதமாக காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது.



Tags : Chennai ,Jaffna , Chennai, Jaffna, Flight, Service
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்