ஏலகிரி : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் நேற்று முன் தினம் முதல் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் நேற்று மிதமான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. எனினும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு குடும்பத்தோடும், நண்பர்களோடும், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘சாரல் மழையில் குடும்பத்தோடு படகு சவாரி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்வுகள் சுற்றுலா தலமான ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைக்கு வந்ததால் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. மேலும் படகு இல்லத்தையும், சிறுவர் பூங்காவையும், இயற்கை பூங்காவையும், மென்மேலும் மேம்படுத்த வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்க வேண்டும். பொது கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.