பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் 5,000 பனை விதைகள் நடப்பட்டது. பனை விதை நடுவோம் பாரம்பரிய மரம் காப்போம் என்பதை முன்னிறுத்தி பனை விதைகள் நடும் பணிக்கு தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் தலைமை வகித்து பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பாரம்பரிய மரமான பனை மரங்கள் அழிந்துவரும் காலகட்டத்தில் மீண்டும் பாரம்பரிய மரமான பனை மரத்தை உருவாக்கும் வகையில் கடந்த முறை புதுக்கோட்டைஉள்ளூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 10,000 பனை விதைகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக நேற்று 5,000 பனை விதைகள் நடும் பணியும் துவங்கப்பட்டது.
விழாவில் புதுக்கோட்டைஉள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசுந்தரிவெங்கடாசலம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன் (கிராம ஊராட்சிகள்), சாமிநாதன் (வட்டார ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சத்தியபாமா மற்றும் ஒன்றிய துணை வட்ட வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.