×

‘மாண்டஸ்’ மழை, சூறைக்காற்று ஓய்ந்தது இயல்புக்குத் திரும்பிய ‘இளவரசி’

* சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறப்பு

* ரம்யமான குளிரை ரசிக்கும் மக்கள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குஷியாகி உள்ளனர்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு தினங்களாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. மேலும் தொடர்மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் டிச. 10ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையும் ஓய்ந்தது. தற்போது கொடைக்கானலில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், மூடப்பட்ட சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள், உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பல்வேறு இடங்களுக்கு சென்றனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழையும், இதமான குளிரும் நிலவியது. இந்த ரம்யமான சூழலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.

Tags : Mandas , Kodaikanal: Tourists are happy as the tourist attractions in Kodaikanal have reopened.
× RELATED மாண்டஸ் புயல் எதிரொலி!: சென்னை மெரினா...