பெங்களூர்: ஜி-20 அமைப்பின் முதலாவது நிதி மற்றும் ஒன்றிய வங்கி பிரநிதிகள் கூட்டம் பெங்களூரில் நாளை துவங்குகிறது. ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து ஜி 20 நிதி மற்றும் ஒன்றிய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. நிதி மற்றும் வங்கி பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஒன்றிய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் , ரிசர்வ் வங்கி துணைஆளுநர் டாக்டர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
ஜி- 20 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதையொட்டி நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா,மத்திய பிரதேசம்.ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்,சுற்றுலா தலங்களுக்கு பிரதிநிதிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.