சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெறும் ஸ்ட்ராங்க் ரூம் பிரிவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சேலம் மத்திய சிறையில் இருந்து சென்னையை சேர்ந்த கொலை வழக்கு கைதி மணிகண்டன் என்பவர் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம், மாநகர ஆயுதப்படையை சேர்ந்த ஏட்டு மணி உள்ளிட்ட 4 போலீசார் இருந்துள்ளனர். கைதிக்கு செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ஏட்டு மணி கொடுத்துள்ளார். அந்த கைதி, செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
இதையடுத்து அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், செல்போன், கஞ்சா சப்ளை செய்த ஏட்டு மணி உள்ளிட்ட 4 போலீசாரையும் பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்து மீண்டும் ஆயுதப்படைக்கு அனுப்பி வைத்தனர். வேறு 4 போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கமிஷனர் நஜ்முல்ஹோதா உத்தரவின்படி சேலம் தெற்கு துணை கமிஷனர் லாவண்யா, 4 போலீசாரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப்பின் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.