
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் அடுத்த சிறுமலை அருகே தென்மலை பகுதியில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற வன பாதுகாப்பு படையினர், 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொருவர் சாணார்பட்டி அருகே கவராயப்பட்டியை சேர்ந்த செல்வம் (எ) சின்னத்தம்பி (39) என்பதும், தென்மலை கன்னுக்குட்டிபாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்ததும் தெரிய வந்தது.
தப்பியவர் தென்மலையை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பதும், 2 பேரும் சேர்ந்து கன்னுக்குட்டிபாறை பகுதியில் இருந்த சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி, பைகளில் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து சின்னத்தம்பியை, சிறுமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த வனத்துறையினர், சின்னத்தம்பியை கைது செய்து 71 கிலோ சந்தன கட்டைகள், நாட்டு துப்பாக்கி, ஏர்கன்ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பியோடிய ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.