சென்னை: மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் கோவளம் மற்றும் காசிமேட்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பொறுத்த அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட விசை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்துள்ளன. அதேபோன்று 3 படகுகள் முற்றிலுமாக சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசிமேடு மட்டுமல்லாது கோவளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக படகுகளும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர். முன் கூட்டியே மீனவர்கள் எச்சரிக்கையோடு இருந்தாலும் கூட பெரிய வகை விசைப்படகை கரைக்கு ஏற்றுவது கடினமாக இருந்ததால் கடலின் கரையிலேயே நிறுத்தினர். புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் படகுகள் சேதம் ஏற்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னர் தான் படகுகளின் சேதம் குறித்த முழு விபரங்கள் தெரியவரும். புயலில் சிக்கி படகுகள் சேதமடைந்திருப்பது மீனவர்கள் மத்தியில் சோகத்தை தந்துள்ளது.