சின்னாளபட்டி : கன்னிவாடி பகுதியில் கொடி அவரை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மார்க்கெட்டில் 1 கிலோ கொடி அவரை ரூ.70க்கு விற்கப்படுகிறது
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி, கோனூர், மேலதிப்பம்பட்டி, கீழதிப்பம்பட்டி, சில்வார்பட்டி பகுதியில் விவசாயிகள் சிலர் கொடி அவரையை பயிரிட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொடி அவரையை பயிரிட்ட அவர்கள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
மார்க்கெட்டில் ஒரு கிலோ கொடி அவரை ரூ.70 வரை விற்கப்படுகிறது. உடலுக்கு ஜீரண சக்தியையும், மலச்சிக்கலை போக்கும் மருந்தாக அவரை உள்ளது. இதுதவிர நோய் எதிர்ப்பு சக்தி அவரையில் அதிகமாக இருப்பதால் தற்போது கொடி அவரைக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரை விவசாயி பழைய கன்னிவாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி கூறுகையில் த, ‘ராட்சை பயிருக்கு செய்வது போல் பந்தல் அமைத்து கொடி கட்டி அவரையை பாதுகாத்து வருகிறோம். தற்போது பனியாலும், காற்றடிப்பதாலும் பூக்கள் உதிர்ந்து விடுவதால் அவரை விளைச்சல் குறைந்து விடுகிறது. குறிப்பாக ஒரு கிலோ அவரை ரூ.100க்கு மேல் விற்றால் தான் அவரை விவசாயிக்கு லாபம் கிடைக்கும்’ என்றார்.