×

மாண்டஸ் புயல் எதிரொலி!: சென்னை காசிமேட்டில் 100 படகுகள் நீரில் மூழ்கி சேதம்.. பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை காசிமேட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை காசிமேட்டில் புயலின் காரணமாக சேதமடைந்த படகுகளை முதல்வர் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் வேலையில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 50 விசைப்படகுகள் நீரில் மூழ்கின. புயல் கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 100 விசைப்படகுகள் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை.

விசைப்படகுகள் மூழ்கியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். விசைப்படகுகள் சேதம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மீன்வளத்துறை இயக்குநர் பழனிசாமி, இணை இயக்குநர் ரீனா உள்ளிட்டோர் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர். புயல் கரையை கடந்த பின் கடலுக்குள் செல்ல படகில் வைக்கப்பட்டு இருந்த ஐஸ் பெட்டி, உணவு பொருட்கள், வலைகளும் சேதமடைந்தது.

சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், சென்னை காசிமேட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சேதமான விசைப்படகுகள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதல்வருடன் அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Chennai ,Chief President ,BCE ,G.K. Stalin , Mantus Storm, Kasimedu, Boats, Chief M.K.Stalin
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...