*ரூ.6.9 லட்சம் மதிப்புடையது
*2300 நுகர்வோர் பயனடைகின்றனர்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6.9 லட்சம் மதிப்புள்ள 18.2 மெ. டன் காய்கறிகள் சராசரியாக 67 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2300 நுகர்வோர் பயனடைகின்றனர்தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் உழவர் சந்தை, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த தென்னை வணிக வளாகம், ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தாய்வு திட்ட வல்லுநர்கள் சேதுராமன் மற்றும் சண்முகபிரியா ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூரில் இயங்கும் உழவர் சந்தை 16.12.1999ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தினமும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.ஆய்வில் விவசாயிகளின் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வது, விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், டான்ஹோடா விற்பனை நிலையம், இயற்கை வேளாண் பொருட்களுக்கான அங்காடி ஆகிய கடைகளில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை பற்றி கேட்டறிந்தனர். மேலும், காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் மற்றும் மின்னணு விலைக்காட்சி பலகை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6.9 லட்சம் மதிப்புள்ள18.2 மெ. டன் காய்கறிகள் சராசரியாக 67 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் சராசரியாக 2300 நுகர்வோர்கள் பயனடைகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட்டு வரும் திட்டங்கள், குளிர் பதன கிடங்கு மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த தென்னை வணிக வளாகத்தில் தென்னை மதிப்புக்கூட்டு இயந்திரம் மையம் தொடர்பாக கள ஆய்வு மற்றும் இதர கடைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேராவூரணி வட்டாரத்தில் திருச்சிற்றம்பலத்தில் இயங்கிவரும் பேராவூரணி கோக்கனணட் அக்ரோ உற்பத்தியாளர் நிறுவன எண்ணெய் இயந்திரம் மையம் , சூரிய உலர் கலன் மற்றும் அம்மாபேட்டையில் இயங்கிவரும் ராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்வில் வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, செயலாளர் சுரேஷ் பாபு, வேளாண்மை அலுவலர்கள் ஜெய்ஜிபால், கனிமொழி , கண்காணிப்பாளர் முருகானந்தம், மேலாளர் சித்தார்த்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் உடனிருந்தனர்.