நாகை: மாண்டஸ் புயல் காரணமாக நாகூர் பட்டினச்சேரியில் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலு குறைந்து உள் மாவட்டங்களை நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக நாகூர் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு சுனாமிக்கு பின் வெட்டாற்று கரையில் இருந்து தெற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மீனவ கிராமங்கள் ஒட்டிய பகுதியில் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கி வருகிறது. கிராமத்தில் கடற்கரையில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போது மாண்டஸ் புயல் காரணமாக வழக்கத்தைவிட 12 அடிக்கு மேல் கடல் நீர் கரைக்கு வந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புயல் எதிரொலியாக 20 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது; 11 ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. 1 மின்கம்பம் சரிந்து விழுந்தது. அலையின் அதீ வேகத்தின் காரணமாக கடற்கரையோரத்தில் உள்ள கூரை வீடுகளில் கடல் நீர் உட்புகுந்ததால் வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிர்த்து வருகின்றனர். நேற்று தினம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவ மக்கள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.