சென்னை: மாண்டஸ் புயல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த மழையின்போது தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால் மழை நீர் தேங்கவில்லை. தற்போது புயல் மற்றும் கனமழை குறித்து அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என அவர் தெரிவித்தார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பொதுவெளியில் ஆளுநர் பேசியது தவறு; முதல்வரிடம் கருத்து கேட்டிருக்கலாம். ஆளுநரின் செயல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் உள்ளது.
அண்மையில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது; காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி தற்காலிகமானது. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக, பாஜகவுக்கும் எதிராக ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.