சென்னை: பார்வதி நாயர், ஆண் நண்பர்களுடன் ஒன்றாக இருந்ததாக யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக, அவர் வீட்டு முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோசை போலீசார் நேற்று காலை புதுக்கோட்டையில் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கேரளாவை சேர்ந்த சினிமா நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 19ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், என் வீட்டின் முன்னாள் பணியாளர் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ்(30) என்பவர், எது படுக்கை அறை பீரோவில் வைத்திருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ₹3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், ₹50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், கேமரா, விலை உயர்ந்த பொருட்கள் திருடி சென்றார் என புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரம், நடிகை பார்வதி நாயர் மீது அவரது ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், ‘பார்வதி நாயர் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் மது விருந்துடன் ஒன்றாக இருந்ததை நான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு என் மீது வேண்டும் என்றே திருட்டு புகார் அளித்துள்ளார். அவரது தவறை மறைக்க என்னை திருடன் என்று கூறி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், எனது வீட்டில் வேலை செய்து வந்த சுபாஷ் சந்திர போஸ், என் புகழ்க்கும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப்பில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். எனவே சுபாஷ் சந்திர போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன் படி நுங்கம்பாக்கம் போலீசார், நடிகை வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் மீது ஐபிசி 509,506(1), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 (ஏ) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பிறகு பார்வதி நாயர் வீட்டின் முன்னாள் ஊழியர் சுபாஷ் சந்திர போசை போலீசார் நேற்று அதிகாலை புதுக்கோட்டையில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பார்வதி நாயர் குறித்து யூடியூப் சேனல்களுக்கு அவதூறாக கருத்து கூறியதை ஒப்புக்கொண்டார்.