முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தர்காவின் 721 பெரிய கந்தூரி விழாவையொட்டி புனித அந்திக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. நாளை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். முக்கிய விழாவான நேற்று முன்தினம் அதிகாலை புனித சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
இந்நிலையில் மாலை உள்ளூர் மக்களுக்காக நடத்தப்படும் புனித அந்திக்கூடு ஊர்வலம் நடந்தது. இதை தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் துவக்கி வைத்தார். தர்காவிலிருந்து மேலதாளங்களுடன் புறப்பட்டு அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை சுற்றி அந்திக்கூடு ஊர்வலம் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து மதத்தினர் பூக்களை அந்திக்கூடு மீது வீசி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவையொட்டி முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். நாளை(8ம் தேதி) புனித கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவடைகிறது.