×

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காவலர் சிகிச்சை

ஆம்பூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்த சக்கரபாணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த இரவுக்காவலர் ஒருவர் சக்கரபாணியை, சக்கர நாற்காலியில் அமரவைத்து வார்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் டாக்டர் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரவு பணியில் இருந்த காவலர், ‘’டாக்டர் வர தாமதம் ஆகலாம் எனக்கூறியபடி அங்கிருந்த படுக்கையில் சக்கரபாணியை படுக்க வைத்துள்ளார். பின்னர் அங்குள்ள அறைக்குள் சென்று குளுக்கோஸ் பாட்டில் கொண்டுவந்து சக்கரபாணிக்கு ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனைக்கண்ட சக்கரபாணி மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரவுக் காவலர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்ததற்காக சக்கரபாணியின் உறவினர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்த நிலையிலும் இறுதியில் விடாப்பிடியாக பேசி அவர்களிடம் இருந்து பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாத நேரத்தில் இரவுக் காவலர் தன்னிச்சையாக சிகிச்சை அளிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ampur ,Government Hospital , Guard treatment of patient at Ambur Government Hospital
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...