லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மரணத்துக்கு பிறகு மன்னராக பதவியேற்றுள்ள 3ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று அவர் சென்றார். அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மன்னர் சார்லசை வேறு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து கை குலுக்கினார். மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்தில் உள்ள யார்க் நகரத்துக்கு சென்றபோதும் மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டைகள் வீசப்பட்டன. அதுதொடர்பாக ஒரு 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.