*மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்டக் கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சங்குபேட்டையிலுள்ள குழந்தைகள் மையத்தைப பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர், எசனை ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையை பார்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்தும், அந்த நியாய விலைக்கடையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையிலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சுவைத்துப் பார்த்து ஆய்வுசெய்தார். அங்கிருந்த மாணவர்களுடன் கல ந்துரையாடி முறையாக உணவு வழங்கப்படுகின்ற தா, அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப் படுகின்றதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
எசனை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், அங்குள்ள மருந்தகத்தினை பார்வையிட்டு, போதிய அளவிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனை பதிவேடுகளை பார்வையிட்டார்.பின்னர், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இதுவரை வரப்பெற்ற மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, எத்தனை விசாரணையில் உள்ளது, எத்தனை நிலுவையில் உள்ளது என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து, மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், தனிநபர் இயந்திரம் மானியத்தில் வழங்குதல் திட்டத்தின் கீழ் பயனாளி ரெங்கராஜ் என்பவருக்கு ரூ.3,97,000 அரசு மானியத்துடன் கூடிய ரூ.7,95,000 மதிப்பிலான டிராக்டரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில்மேஷ் ராம் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தகருணாநிதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இந்திரா, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் பாண்டியன், முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட செயற் பொறியாளர் செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் ராதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) நாராயணன், (வேளாண்மை) பூவலிங்கம், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.