ஜெய்ப்பூர்: பாஜ அலுவலக மாடியில் நின்றிருந்தவர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்து பிளையிங் கிஸ் கொடுத்து ஆரவாரம் செய்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியாக தனது நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் உள்பட ஏராளமானோர் சென்றனர்.
அப்போது ஜாலவார் நகர பாஜ அலுவலகத்தின் மாடியில் ஏராளமானவர்கள் ராகுல்காந்தியின் நடைபயணத்தை பார்க்க கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ அலுவலகத்தை கடந்து சென்ற ராகுல்காந்தி யாரும் எதிர்பாராத வகையில் மாடியில் நின்றிருந்தவர்களை பார்த்து கையசைத்து பிளையிங் கிஸ் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பாஜ அலுவலகத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் பின்னால் நின்றவர்களை நோக்கி ராகுல்காந்தி பிளையிங் கிஸ் கொடுத்து கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்திய காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.