புதுடெல்லி: ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்திற்கு புதிய பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்து உள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த அஜய் மாகென் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். போட்டி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த ராஜினாமாவை தற்போது காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் புதிய பொறுப்பாளராக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சுக்ஜிந்தர்சிங் ரந்தாவா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல். புனியா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குமாரி செல்ஜா புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் விவேக் பன்சால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாநிலங்களவை எம்பி சக்திசிங் கோகில் நியமிக்கப்பட்டுள்ளார்.