வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் அன்னை கஸ்தூரிபாய் தெருவில் கடந்த 1ம் தேதி தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த சாலை தரமற்ற முறையில், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே பெயர்ந்து வரும் நிலையில் இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளிக் கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்துள்ளது. அதை 4வது மண்டல மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் சரியாக கவனிக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் உடனடியாக புதிய சாலை அமைக்கப்பட்டது.