சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி, நரசிங்கபுரத்தில் மாற்றுத்திறனாளி கழிவறைகள் உள்ளன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிவறைகள் உள்ளே நுழையமுடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது. கழிவறை சிதிலமைந்த நிலையில் உள்ளதுடன், தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் அருகில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகத்தை கழிவறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று சேடபட்டி நல்லமுத்துபிள்ளை தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறை செயல்படவில்லை. இதனால் திறந்தவெளியை கழிவறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துகின்றனர். அருகில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதியும் அசுத்தமடைகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் கழிவறையை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.