வேதாரண்யம் : கோடியக்கரையில் மீன்கள் வரத்து அதிகமானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் மிக குறைந்த அளவே மீன் பிடித்துக் கொண்டு வந்தனர். இதனால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில், அதிகளவில் வாவல், கிழங்கன், நண்டு, இறால் கிடைத்திருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீசன் தொடங்கியது முதல் மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில், தற்போது பல்வேறு வகையான மீன்கள் அதிகளவு கிடைப்பதால் இங்கிருந்து கேரளா, கர்நாடக மற்றும் தமிழகம் முழுவதும் அதிக அளவில் மீன் ஏற்றுமதி செய்து வருகின்றனர். மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். நேற்று கோடியக்கரையில் நான்கு டன் கிழங்கன், ஒருடன் விலையுயர்ந்த வாவல்மீன், நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் மற்றும் 25க்கும் மேற்பட்ட வகையான பல்வேறு மீன்கள் கிடைத்தன. நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 6 டன் மீன்கள் பிடிக்கபட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கபட்டது.
நேற்று மீனவர்கள் அகப்பட்ட மீன் வகைகளில், கிலோ ரூ.330க்கு விலை போன நான்கு டன் கிழங்கன் மீன் பெங்களூருக்கு ஏற்றுமதி ஆனது. மற்ற வாவல், நண்டு, இறால் உள்ளிட்டவைகள் கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் அனுப்பிவைக்கபட்டன. நேற்று கிழங்கன்மீன் கிலோ ரூ.330, வாவல் 700, நீலக்கால் நண்டு 360, புள்ளி நண்டு 1601, இறால் கிலோ 500க்கும் ஏலம் போனது. மீன்கள் அதிகம் கிடைத்ததாலும், நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மீன் துறையினர் காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் இன்று (4ம்தேதி) முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் நேரத்தில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என வருத்தத்தில் உள்ளனர்.