×

திருவண்ணாமலை தீபத் திருவிழா 8ம் நாள் உற்சவத்தில் கோலாகலம் குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் பவனி

*கடும் குளிரிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 8ம் நாளான நேற்று, பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 6.40 மணிக்கு தொடங்கிய பஞ்சரதங்கள் பவனி விடிய விடிய நடந்தது. மாட வீதியில் அடுத்தடுத்து பவனி வந்த பஞ்சரதங்களின் வீதியுலா நேற்று அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

தேரோட்டத்தின் நிறைவாக திரிபுர தகனம் நிகழ்வும், தேருக்கு எதிரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சந்திரசேகரர் அருள்பாலித்தல் நிகழ்வும் நடந்தது. பின்னர், பஞ்சரதங்களில் பவனி வந்த விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேர்களில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, விழாவின் 8ம் நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் காலை 11.45 மணி அளவில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து, மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி திருவீதியுலாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் 8ம் நாள் இரவு உற்சவம் விமரிசையாக தொடங்கியது. அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர்.

அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர். பின்னர். அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனங்களில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வந்தனர். நள்ளிரவு வரை வீதியுலா நடந்தது. பனியையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவை தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

பாக்ஸ்...

விழாவின் தனித்துவம் முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடமை, பாசங்களில் இருந்து நீங்குதல், தன்வயத்தனாதல், பேரருள் உடமை, ஆற்றளுடமை, இயற்கை உணர்வுடமை, தூய்மை உடம்புடையனாதல் ஆகிய எட்டு வகையான குணங்களையும் கொண்டவர் இறைவன். இந்த எட்டு குணங்களையும் ஆன்மாக்களுக்கு அருளவே 8ம் நாள் உற்சவம் நடைபெறுவதன் உட்பொருளாகும்.

குதிரை வாகனத்தின் சிறப்பு

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு கால்களையும், ஞான காண்டம், கரும காண்டம் எனும் காதுகளையும், பரஞானம், அபரஞானம் எனும் கண்களையும், விதிவிலக்கு எனும் முகத்தையும், ஆகமம் எனும் அணிகலன்களையும், சதங்கை, கிண்கிணி, மாலை, சிலம்பு எனும் மந்திரங்களையும் உள்ளடக்கிய குதிரை வாகனத்தின் மீது, உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் பவனி வந்து, அடியார்களின் பாசக் கயிறுகளை இற்று விழும்படி அருள்பாலிக்கிறார்.

Tags : Annamalaiyar Bhavani ,Kolagalam ,Tiruvannamalai Deepa festival , Thiruvannamalai: On the 8th day of the Karthika Deepatri festival in Tiruvannamalai, Ninnamulaiyamman Sametha rode in a large horse-drawn vehicle.
× RELATED பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி...