சென்னை: தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைப்படி சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் 4 அணிகள் இல்லை; 4 பேர் தான். இபிஎஸ் தலைமையிலான அதிமுக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்று அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் இல்லை.
இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என யாருக்கும் அதிமுகவை வழிநடத்தும் தகுதியில்லை. என்னுடைய மறைவுக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார். ஆனால், அதிமுக என்ற கட்சி 100 நாட்கள் கூட இருக்காது என தோன்றுகிறது. தங்களின் சுயநலத்திற்காக அதிமுகவை பயன்படுத்தி வருகின்றனர். பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிமுக தலைவர்கள் உள்ளனர். அதிமுகவுடன் அந்த சம்பந்தமும் இல்லை என விலகி நிற்கிறேன். நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் பிடிக்காததால் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை இவ்வாறு கூறினார்.