×

திருப்பூர் அருகே வட்டமலை கரை அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் திறந்துவிட கோரி விவசாயிகள் தீபம் ஏற்றி வழிபாடு

திருப்பூர் : திருப்பூர் அருகே வட்டமலை கரை அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் திறந்துவிட கோரி விவசாயிகள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வெள்ளக்கோயில் அருகே உள்ள உத்தம பாளையத்தில் வட்டமலை ஓடையின் குறுக்கே 600 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1980-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. அதன் பிறகு இங்கிருந்து 2 முறை மட்டுமே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், பி.ஏ.பி. பாசன தொகுப்பில் இருந்து உபரிநீர் திறக்க முறையான அரசாணை இருந்தும் தண்ணீர் விடப்படாததால் 1985-ம் ஆண்டு முதல் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும்
பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பி.ஏ.பி. தொகுப்பில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணைக்க தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர், மார்ச் மாதம் திறந்து விடப்பட்ட நீரால் 6,050 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அணைக்கு நிரந்தரமாக தண்ணீர் திறந்துவிட கோரி வட்டமலை கரை அணையில் விவசாயிகள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அணை பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், அங்குள்ள மதுபான கடையை மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.   பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் இருந்து வரும் உபரி நீரை அணைக்கு திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.  


Tags : Tirupur ,Vattamalai Karai Dam , Tirupur, Vattamalai, water, farmer, lamp, worship
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்