வலங்கைமான்: பயிர்கள் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க விவசாயிகள் அளவுக்கு அதிகமான உரங்களை பயிருக்கு விடுவதை தவிர்க்கவேண்டும் என வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளார். நெல் பயிரில் உரம் மேலாண்மை பற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. வலங்கைமான் வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 14635 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் அளவுக்கு அதிகமான உரங்களை பயிருக்கு விடுவதால் பயிர்கள் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது இதனை கட்டுப்படுத்த அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றார் போல் உரங்களை இடவேண்டும் . மேலும் நெல் பயிரில் தழைச்சத்து மேலாண்மைக்காக பச்சை இலை வண்ண வடை (LCC Card) பயன்படுத்தி இலையின் நிறத்தினை ஒப்பிட்டுப் பார்த்து தலைச்சத்தினை இடலாம் அதற்கு பயிரில் மேலிருந்து மூன்றாவது நிலையை எடுத்து அட்டையில் ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்றார் போல் தழைச்சத்தினை இட வேண்டும் .
அல்லது பொதுவான உரப்பரிந்துறையான எக்டேருக்கு 120கிலோ தழைச்சத்து,40 கிலோ மணிச்சத்து, 40கிலோ சாம்பல் சத்துக்களை இடலாம். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும் தலைச்சத்து, மற்றும் சாம்பல் சத்துக்களை நான்கு பாகங்களாக பிரித்து ஒரு பகுதியினை அடியுரமாகவும் மேலும் மூன்று பகுதிகளை தூர்கட்டும் பருவத்தில் 30 கிலோ தழைச்சத்து,10 கிலோ சாம்பல் சத்து அதனுடன் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நுண்ணூட்டக் கலவையினை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் கலந்து இடவேண்டும் மேலும் கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவம், ஆகிய பருவங்களில் தலா 30 கிலோ தழைச் சத்தும், 10 கிலோ சாம்பல் சத்தும், இடவேண்டும் இவ்வாறு உரத்தினை பிரித்து அளிப்பதனால் விவசாயிகளில் சாகுபடி செலவு குறைவதோடு சத்துக்கள் பயிர்களுக்கு முழுவதுமாக சென்றடைகின்றது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.