×

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த விழாவில், மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவை புரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி உதயகுமார், சிறந்த நிறுவன விருது- திருச்சி இன்டேக்ட் சிறப்பு பள்ளி அறக்கட்டளை, சிறந்த ஆசிரியருக்கான விருது- மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக தேனி மாவட்டம், லூசிகிரசன்சியா சிறப்புப் பள்ளி மற்றும் தொழில் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ம.கவிதாவு, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக சென்னை மயிலாப்பூர், சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் வி.ஜேம்ஸ் ஆல்பர்ட்டுக்கும், பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்ததற்காக சென்னை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கொ.மார்க்ரெட்டுக்கும், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் விருது ஜோ.சரஸ்வதி, தி.சே.அறிவழகன், சி.ஆர்.பாலாஜி, மு.சுந்தரம், இ.அ.நிவேதா, வா.கலைவாணி, அன்னமேரி, பொ.பொம்மண்ணன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் சுலோசனா கார்டன்ஸ் நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மைய சிறந்த ஆசிரியருக்கான விருது செவித்திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்ததற்காக காஞ்சிபுரம், தமிழ்நாடு அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்பநிலை பயிற்சி மையத்தை சேர்ந்த எஸ்.சித்ரா, மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக கோயம்புத்தூர், வித்யா விகாஸினி வாய்ப்புப் பள்ளி பா.வி.ஜோதி ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த சிறந்த அரசு நிறுவனத்திற்கான விருதினை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும், சிறந்த தனியார் நிறுவனத்திற்கான விருது திருச்சி-தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளிக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருது செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துநருக்கான விருது எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, பாராட்டினார்.

விருது பெற்றவர்களுக்கு நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை  தொடங்கி வைக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

முன்னதாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, ஊதா அங்காடி மற்றும் நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.ஆனந்த குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin. , State award to those who have rendered outstanding service for the welfare of differently-abled persons: Chief Minister M.K.Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...