×

இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய ஹாரி - மேகன் தம்பதிக்கு உயரிய சமத்துவ விருது: அரண்மனையில் நடந்த இனவெறி பாகுபாடு தொடர் ரிலீஸ்

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய ஹாரி - மேகன் தம்பதிக்கு உயரிய சமத்துவ விருது வழங்கப்படுகிறது. மேலும், அரண்மனையில் நடந்த இனவெறி பாகுபாடு குறித்த தொடரும் விரைவில் வெளியாகிறது. இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தம்பதியர் அரச குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தனர். திடீரென இளவரசர் - இளவரசி தம்பதி தங்களது அரச குடும்பத்தின் அனைத்து பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதுகுறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, ‘நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ? என்று அரச குடும்பத்தினர் கவலைபட்டனர். பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது என்றும், இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் பேசினர்.

இவர்களது இந்த பேச்சால், தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளானேன். பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா? என்றும் யோசித்தேன். என்னிடம் உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்’ என்றார். தொடர்ந்து இளவரசர் ஹாரி அளித்த பேட்டியில், ‘மேகன் மார்க்கலுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அரச குடும்பத்தில் சிக்கியிருந்த நான், என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் ஆகியோரும் பிரச்னையை எதிர்கொண்டனர். அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் எனது தந்தை, என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்’ என்றார். இவர்களின் பேட்டியை தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு தம்பதிக்கு அளித்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இன்வெறி பார்க்கப்படுவதாக இளவரசரே குற்றம் சாட்டி, அரச குடும்பத்தில் இருந்து விலகினார். சமத்துவத்தை விரும்புபவர்கள் இந்த தம்பதிகளை பாராட்டினர். அவர்களுக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டது. சமூக மாற்றத்திற்கான சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க உழைப்பவர்களுக்கு ‘ராபர்ட் எஃப் கென்னடி ரிப்பிள் ஆஃப் ஹோப்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதுகள் வரும் 6ம் தேதி ஹாரி - மேகன் மார்கல் தம்பதியினருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஹாரி - மேகன் மார்க்கல் குறித்த ஆவண தொடர் தயாரிக்கப்பட்டு வந்தது. அதன் டிரெய்லர் கூட வெளியாகியுள்ளது. ‘ஹாரி அண்ட் மேகன்’ என பெயரிடப்பட்ட அந்த ஆவண தொடரில், இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஏற்பட்ட அனுபவங்களை காட்சிபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Harry ,UK ,Meghan ,Palace , UK royals, Harry-Meghan receive top equality award, racism at palace
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...