×

கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், அழகாபுரி அருகே கணபதியேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையின் எதிரேயுள்ள கோயிலில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

இது கிரந்த கல்வெட்டாகும். இதன் மேற்பகுதி ஒழுங்கற்ற நிலையில் சிதைந்து காணப்படுகிறது. மேலும் கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை என்பதால் இது ஒரு துண்டு கல்வெட்டாகும். இதில் ஒரு சில வார்த்தைகளை தவிர மற்றவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுவதால் அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் கல்வெட்டில் ரதம் - ராமராஜ - ஓங்கு போன்ற வார்த்தைகளை வைத்து பார்த்தால் பாதுகாப்பு அல்லது தானம் சம்பந்தமானதாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த கல்வெட்டின் கீழே பொங்கி வழியும் ஒரு கும்ப கலசம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை பார்த்தால் முற்காலங்களில் இப்பகுதியில் விவசாயம் வளமையாகவும், செழுமையாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதனை குறிப்பதாக தோன்றுகிறது. மேலும் கிரந்த எழுத்துகள் மற்றும் பூரண கும்பம் புடைப்புச் சிற்பத்தின் அடிப்படையில் இது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவ்வாறு கூறினர்.

Tags : Discovery of the Granth Inscription
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு