×

செயற்கை அருவிகளை தடுக்க குழு: நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு..!

மதுரை: மதுரை: செயற்கை அருவிகளை தடுக்க கோரிய வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகள் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் இயற்கையாக உருவாகின்றன.

பொருளாதார ரீதியாக வசதிமிக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இங்கு ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இவற்றில் அருவிகளின் நீர்வழிப்பாதையை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளனர். இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல், குமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் உள்ளன. எனவே,  இயற்கை நீரோட்டத்தை மாற்றி, செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 23ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், ‘‘செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான ஏராளமான புகைப்படங்கள், இணையதள முகவரிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இயற்கை அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 2 நாட்களில் குழு அமைக்க வேண்டும்.

இக்குழு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொகுசு விடுதிகளுக்கும் சீல் வைக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பின்பற்றும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

என்று அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் இந்த குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற ஒரு நிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்க விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Committee to Prevent Artificial Falls ,Ikort Branch ,Government of Tamil Nadu , Committee to prevent artificial waterfalls: ICourt branch praises the Tamil Nadu government for setting up a monitoring committee to immediately implement the court order..!
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...