×

32 துறைகள், 50 நகரங்கள், 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா..!

டெல்லி: ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்ைப இன்று முறைப்படி ஏற்றது. பிரதமர் மோடி, ஓராண்டுக்கு ஜி-20 அமைப்பின் தலைவராக செயல்படுவார். நாடு முழுவதும் 50 நகரங்களில் 32 துறைகளுடன் இணைந்து 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், அடுத்தாண்டு (2023) ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச. 1) அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவின் ஜி-20 நிகழ்ச்சி நிரலானது செயல் சார்ந்ததாகவும், லட்சியம் சார்ந்ததாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்.

இந்தியாவின் ஜி-20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையிடமாக மாற்ற ஒன்றிணைவோம். மிகவும் சக்திவாய்ந்த ஜி-20 நாடுகளிடையே, பிற நாடுகளுடனும் நேர்மையான உரையாடலை இந்தியா ஊக்குவிக்கும். மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஜனநாயகத்தின் அடித்தளதிற்கு இந்தியா பங்களிக்கும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற நம்பிக்கையை கொடுப்பதில் இந்தியா கவனம் செலுத்தும். இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியானது, ஒற்றுமையின் உணர்வை ஊக்குவிக்கும்.

உணவு, உரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியலற்றதாக்க மாற்ற இந்தியா முயலும். அவ்வாறு செய்வதால், புவிசார் அரசியல் பதற்றங்கள் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்காது. ஒவ்வொரு இந்தியனும் ஜி-20 தலைவர் பதவியை ஏற்பது பெருமைக்குரிய தருணமாகும். நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்களை நடத்துவோம். இதன்மூலம், இந்தியாவின் அதிசயம், பன்முகத்தன்மை, பாரம்பரியங்கள் மற்றும் கலாசார செழுமையை பகர்வோம். இந்தியாவில் ஜனநாயகத்தின் தனித்துவமான கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க விரும்புகிறோம்.

நாம் இணைந்து ஜி-20 மாநாட்டை உலகளாவிய மாற்றத்தின் கருவியாக மாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார். ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றதால், அதன் தலைவராக பிரதமர் மோடி செயல்படுவார். இன்று நாடு முழுவதும் 100 நினைவு சின்னங்களில் ஜி-20 லோகோவுடன் மின்னொளியில் ஒளிரும். இந்தாண்டு முழுவதும் 50 நகரங்களில் 32 துறைகளுடன் இணைந்து 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வரும் 5ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,G-20 , 32 sectors, 50 cities, 200 meetings to be held: India takes over G-20 leadership
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...