திருப்பூர்: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை குறித்தும், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, (30.11.2022) அன்று தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டவர்கள் குடியேறிய நிலை, சமுதாயக் கூடங்களின் பராமரிப்பு, ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்கிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை மற்றும் அக்காலியிடங்களை ஒதுக்கீடு செய்தல், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் இப்பொருண்மைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - தென்காசி சு ஜவஹர், அரசு கூடுதல் செயலாளர் - சு.பழனிசாமி, ஆதிதிராவிடர் நல இயக்குநர் - த.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் - க.சு.கந்தசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.