×

முன்னாள் காதலியை சுட்டுக் கொன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தற்கொலை: அமெரிக்காவில் பயங்கரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது முன்னாள் காதலியை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி ஒருவர், பின்னர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வில்லியம் பீட்டி (47); அவரது முன்னாள் காதலி  எரின் கேட்டியர் (47) சவுத் ஜெர்சியில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த வில்லியம் பீட்டி, மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் எரின் கேட்டியரை சுட்டுக் கொன்றார். ரத்த வெள்ளத்தில் எரின் கேட்டியர் சரிந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் வில்லியம் பீட்டி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வில்லியம் பீட்டியின் நண்பரும், பென்சில்வேனியாவைச் சேர்ந்த முன்னாள் சக ஊழியரான மாட் க்ரீன்பெர்க் கூறுகையில், ‘வில்லியம் பீட்டி மிகவும் கோபக்காரர். மற்றவரை கட்டுப்படுத்தும் மனநிலையில் இருப்பவர்; மற்றவர்களுடன் பேச அனுமதிக்கமாட்டார். எரின் கேட்டியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது முன்னாள் காதலியை சுட்டுக் கொன்றுள்ளார். எரின் கேட்டியர் மீதான வெறுப்பின் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாம்’ என்றார்.


Tags : America , Retired cop commits suicide after shooting ex-girlfriend: horror in America
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!