சரண்: காதல் விவகாரத்தால் பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட பெண்கள் அடித்து துவைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை மிருகத்தனமாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் ஒரு பெண்ணை பிடித்து, அவரின் தலைமுடியை பிடித்து அடிக்கிறார். மற்றொருவர் உதைக்கிறார்; இன்னும் சிலர் குத்துகிறார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு உதைக்கிறார். இந்த சண்டைக்கு மத்தியில், அந்தப் பெண்ணுடன் இருந்த இளைஞன் ஒருவனையும் பிடித்து அடிக்கின்றனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணையும், இளைஞனையும் 5 இளம்பெண்களும் விடுவித்தனர். தகவலறிந்த போலீசார், இருதரப்பினரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண், தனது காதலனுடன் திருவிழாவில் சுற்றித்திரிந்தார். ஆனால், அந்த இளைஞனை மற்றொரு பெண் காதலிப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஆவேசமடைந்த 5 பெண்களும், சம்பந்தப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனார்.