×

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு; பயணிகள் அலறியடித்து ஓட்டம்: திருப்பதியில் அதிகாலை பரபரப்பு

திருமலை: திருப்பதி ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மர்மநபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இதேபோன்று இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த ரயில் புறப்பட்ட தயாரானது. பயணிகள் ஏறி கொண்டிருந்தனர். அப்போது முன்பதிவு பெட்டியான எஸ் 6ல் உள்ள கழிவறையில் இருந்து திடீரென கரும்புகை அதிகளவில் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி அவசர அவசரமாக தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு இறங்கினர்.

சத்தம் கேட்ட அதே ரயிலின் பக்கத்து பெட்டிகளில் இருந்த பயணிகளும் இறங்கினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். புகை வந்த கழிவறையை திறந்தனர். தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக ரயில் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக தீத்தடுப்பான் கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் ஒருவர் சிகரெட் பிடித்துவிட்டு அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

இதனால் குப்பைகள் எரிந்ததோடு கழிவறை முழுவதும் எரிந்தது தெரிந்தது. ரயில் புறப்படுவதற்கு முன்பு கவனிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. இதனிடையே ரயிலில் தீ வைத்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupati , Setting fire to an express train; Commuters run screaming: Early morning rush in Tirupati
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...