சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகையின்போது எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்தார்.
தமிழக காவல்துறையிடம் தரமான உபகரணங்கள் உள்ளன:
தமிழகத்தில் காவல்துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானதாக உள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு தரமாக உள்ளன என டிஜிபி விளக்கம் அளித்தார்.
பாஸ்வேர்டை எந்த வங்கியும் கேட்காது:
உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தினார்.
மின்நுகர்வோர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை:
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக வரும் தவறான குறுந்செய்தியை மக்கள் நம்ப வேண்டாம். ஆதார் எண்ணை இணைக்க 10 ரூபாய் கட்டுங்கள் என்று வரும் குறுந்செய்தியை நம்ப வேண்டாம். பொதுமக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தாலோ, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிலோ, தமிழ்நாடு காவல் உதவி செயலி மூலமோ புகார் தரலாம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.