புதுடெல்லி: உலகமே பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் பணக்காரர்கள் சொத்து மதிப்பு பல மடங்கு எகிறியிருக்கிறது என்பதை போர்ப்ஸ் இதழ் பட்டியல் போட்டு காட்டி உள்ளது. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ், இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அதிகரித்து, ரூ.64 லட்சம் கோடியை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப்-10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.30.8 லட்சம் கோடியாக உள்ளது. இப்பட்டியலில் குஜராத்தின் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி.
அதானி ஆசியாவின் நம்பர்-1 பணக்காரராக உயர்ந்து விட்டாலும், இப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் 3வது இடத்தில் உள்ளார். 2013ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7.1 லட்சம் கோடி. 3வது இடத்தில் டிமார்ட் சூப்பர்மார்க்கெட் குழு நிறுவனத்தின் ராதா கிருஷ்ணன் தமானி, 4வது இடத்தில் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா, 5வது இடத்தில் எச்சிஎல் நிறுவன தலைவர் ஷிவ்நாடார் ஆகியோர் உள்ளனர்.