×

போலீசாரின் தடையை மீறி நள்ளிரவில் கொடி ஏற்றிய விடுதலை சிறுத்தைகள்: கடலூர் அருகே பதற்றம்; போலீசார் குவிப்பு

வடலூர்: கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடிஏற்ற பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில் நள்ளிரவில் விசிகவினர் கொடியேற்றியதால் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த சுப்பிரமணியபுரம் கிராமத்தில் விசி கட்சினர் 60 அடி உயர கொடி கம்பம் நட்டு உள்ளனர். இன்று மாலை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கொடி ஏற்றுவதற்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு பாமகவினர் கடலூர் - விருத்தாச்சலம் சாலையில் திடீர் மறியல் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விசிக கொடிக்கம்பத்தினை அகற்றாவிட்டால் மறியலை கைவிட மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து விசிக நிர்வாகிகளிடம் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள்தான் கொடிக்கம்பம் நட அனுமதி அளித்தனர். ஆனால் இப்போது திடீரென கொடிக்கம்பத்தை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அதனை அகற்ற முடியாது எனக்கூறி பதிலுக்கு நேற்று இரவு விசிகட்சியினர் கடலூர்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விசிக மற்றும் பாமக இரு கட்சியினரும் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் ஒரே இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அசம்பாவிதத்தை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பாமக மற்றும் விசிகவினருடன் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, எஸ்பி சக்திகணேசன், ஏடிஎஸ்பி அசோகன், டிஎஸ்பிக்கள் கரிகால்பாரி, சபியுல்லா, ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நள்ளிரவு 12 மணிவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் இப்பிரச்னை குறித்து இரண்டு நாட்களில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தலாம், அதுவரை கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என அதிகாரிகள், காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே 12.40 மணி அளவில் அதே இடத்தில் கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளான விசிகவினர் கலந்து கொண்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை மீண்டும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Lib Dems ,Cuddalore , Lib Dems fly flag at midnight defying police ban: Tension near Cuddalore; Police build up
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!